Tuesday, December 20, 2011

அன்னையும் தந்தையும் தானே

திரைப்படம் : ஹரிதாஸ்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
இசை: ஜி. இராம நாதன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1944

அன்னையும் தந்தையும் தானே - பாரில்
   அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்

தாயினும் கோவிலிங் கேது - ஈன்ற
   தந்தைசொல் மிக்கதோர் மந்திர மேது
சேயின்கடன் அன்னை தொண்டு - புண்ய
   தீர்த்தமும் மூர்த்தித் தலம்இதில் உண்டு

தாயுடன் தந்தையின் பாதம் - என்றும்
   தலைவணங் காதவன் நாள்தவ றாமல்
கோவிலில் சென்றென்ன காண்பான்? - நந்த
   கோபாலன் வேண்டும் வரந்தரு வானோ?

பொன்னுடல் தன்பொருள் பூமி - பெண்டு
    புத்திர ரும்புகழ் இத்தரை வாழ்வும்
அன்னைபிதா இன்றி ஏது? - மரம்
    ஆயின் விதையின்றிக் காய்கனி ஏது?

No comments:

Post a Comment